Tuesday, December 21, 2010

கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா

 கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா என்னுடைய அப்பாவின் முதலாவது தம்பி .என்னுடைய பெரியப்பா யக்ஞராம தீக்ஷதர் .அப்பாவின் கடைசி தம்பியின் பெயர் கணேசன் .கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா மதுரையில் இருந்ததாலும் எங்கள் குடும்பமும் மதுரையில் பலவருடங்கள் இருந்ததாலும் சித்தி சித்தப்பாவுடன்,எங்களுக்கு நெருக்கம் அதிகம் .

எனக்கு சிறுவயதிலேருந்தே (என் சகோதர சகோதரிகள் அனைவருக்குமே )சித்தப்பாவை ரொம்ப பிடிக்கும் .எங்கள் அனைவரையுமே அவருடைய குழந்தைகளை போல் நடத்துவார் .மிகவும் அன்பாகவும் ,நட்பாகவும் பழகுவார் .எங்களுடைய அப்பாவிடம் நாங்கள் சிறுதுதள்ளியே இருப்போம் .அப்பா எங்களை தொடாமல் கொஞ்சுவார் .அவருடைய அன்பு எப்போதும் கண்டிப்பு கலந்ததாக இருக்கும் . ஆனால் சித்தப்பா ,எங்களை ராஜா ,பட்டு என்று செல்லமாக கூப்பிடுவார் .எங்களை அணைத்து,கசக்கி 
இடுப்பை கைகளால் வளைத்து என்று தன்னுடைய அன்பை கொட்டுவார் .


சித்தப்பா மற்றும் அவருடைய சகோதர ,சகோதரிகள்,இடையே.உள்ள,எந்த கருத்து வேறுபாடுகளும்,அவர் எங்களிடம் பிரியமாக இருந்ததை பாதித்தது இல்லை.அத்தகைய 
ஒரு நிஜமான பிரியமும் அன்பும் கொண்டவர் என் சித்தப்பா.

அப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதனை பற்றி என்னுடைய நினைவுகளை இங்கே எழுத விரும்புகிறேன் .

சித்தப்பா மிகவும் கம்பீரமான தோற்றம் உடையவர்.சதுரமானமுகம்..கூர்மையான சிறிய கண்கள்,செதுக்கியது போன்ற அழகான நீண்ட மூக்கு ,கட்டு மஸ்தான உடல் வாகு ,என்று அவரது தோற்றத்தை பற்றி கூறி கொண்டே போகலாம் .
அவர் இருக்கும் இடத்தில அவர் தான் தலைமை குணத்துடன் இருப்பார் .எல்லோரையும்
வசீகரித்து விடுவார் .அவருடைய நண்பர்கள் கூட்டம் மிகமிக பெரியது .சிறுவயது முதலேஅவருக்கு நண்பர்கள் அதிகம் என்று அம்மா சொல்லுவார்
.
சித்தப்பா புரூக் பாண்ட் கம்பெனியில் விற்பனை பிரிவில் வேலை பார்த்தார் .தமிழ்நாட்டில் அந்த கம்பெனியின் ஆரம்பகால ஊழியர்களுள் அவரும் ஒருவர் .மதுரை மாவட்டம் ,தேனீ ,பெரியகுளம் ,உத்தமபாளையம் ,கம்பம் பகுதிகளில் கம்பெனி பிராண்ட் ,அழுத்தமாக கால் ஊன்ற அவருடய பங்கு மகத்தானது .நேரம் ,காலம் ,மழை ,வெயில் ,பார்க்காமல் ,அவர் தனது கம்பனிக்காக ஆற்றிய பணி மகத்தானது.

நான் மதுரையில் பள்ளியில் படித்த காலங்களில் அவருடைய  depot விற்கு சென்று இருக்கிறேன் .பொதுவாக மாலை 5 அல்லது 6 மணிக்கு மேல் தான் , சேல்ஸ் முடிந்து வருவார் .அதன் பிறகு தான் அவருடைய desk work ஆரம்பிக்கும் .stock on hand tally செய்து 
பின்னர் cash tally செய்து reports எழுதி முடித்து பின்னர் ,அடுத்த நாள் திட்டங்களை அவருடைய உதவியளாருடன்,பேசி முடித்து வீட்டிற்கு புறப்படுவார் . எனக்கு இப்போது தான் புரிகிறது ,நான் அவருக்கு எவ்வளவு இடைஞ்சல் ஆக இருந்திருப்பேன் என்று . ஆனால் சித்தப்பா , எனனை பார்த்ததும் வாடா ராஜா , என்று அழைத்து , டீ வாங்கி கொடுத்து ,என்னிடம் எண்ணமுடியாத அளவுக்கு சில்லறை நாணயங்களை கொடுத்து எண்ணிகுடு என்று கூறி , அவர் வேலை பார்த்து கொண்டு இருப்பார் . depot அழகாக 
ஒழுங்கு செய்யப்பட்டு , இருந்த இடத்திலிருந்தே கணக்கு பார்க்கவசதியாக வைத்திருப்பார் .டீ பாக்கெட்கள் பார்க்கவே ,வண்ண வண்ண மாக கண்ணுக்கு அழகாகவும்நல்ல நறுமணத்துடனும் இருக்கும் .

இப்பொழுது உள்ளது போல் போக்குவரத்து வசதிகள் அப்போது கிடையாது .அவருடைய வாஹனம் சைக்கிள் தான் .அவருக்கு சைக்கிள் மனைவியை போல .இரவு வீட்டிற்கு வந்ததும் ,சைக்கிளை ,பாந்தமாக ,அதற்குரிய இடத்தில நிறுத்தி ,சந்தோஷமாய் ,அதன் சீட்டில் ஒரு தட்டு,தட்டி ,பின்னர் உள்ளே வருவார்.ஒரு நாளைக்கு கிட்ட தட்ட இருபது முதல் முப்பது மைல்கல் ,ஓடி தன்னுடன் உழைத்த சைக்கிளை ,காதலி போல் கண்ணும் கருத்துமாக கவனிப்பார் .(அதனால் தான் லாவண்யாவும் ,வெங்கடேஷும் ,சைக்கிள் ஓட்டுவதை ஹாபியாக ,கொண்டுள்ளனர் போலும் ).

வீட்டிற்குள் வந்ததும் ,shoe,watch ,முதலியவற்றை அதனதனுடைய இடத்தில் வைப்பார்..
வீட்டை முழுவதும் ஒரு நோட்டம் விடுவார் .குழந்தைகளை என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று பார்ப்பர். பின்னர் சித்தியிடம் பேசிக்கொண்டே ,இடுப்பில் பெரிய துண்டை கட்டிக்கொண்டு ஒரு குளியல் போடுவார் . பின்னர் அதே துண்டை அலசி ,நன்கு ,பிழிந்து ,இடுப்பில் கட்டிக்கொண்டு, விபூதி இட்டு கொள்வார் .சித்தப்பா கண்ணாடி முன்னால்,நின்று கொண்டு கிராப்சீப்பால் ,தலை வாரி கொள்ளும் அழகே தனி .அவருடைய ஹேர் ஸ்டைல் எனக்கு பிடிக்கும் .ஆங்கில நடிகர்கள் போல ஸ்டைல் ஆக
இருப்பார் .தலையில், வஹிடு துல்லியமாக இருக்கும் .  

பின்னர் ,சாப்பிட உட்காருவார் . அப்போது தனது கடுமையான வேலை செய்த களைப்பை
மறந்து ,மிகவும் ரிலாக்சாக இருப்பார் .அவர் சாப்பிடுவதும் தனி அழகாக இருக்கும்..நாங்கள் பக்கத்தில் இருந்தால் ,எங்களை கூப்பிட்டு ,கழுத்தை,கட்டிக்க சொல்வார்.பின்னர் எங்களை தன் முதுகோடு வைத்து ஆட்டிகொண்டே ,சுவாரசியமாக சாப்பிடுவார் .பின்னர் வேஷ்டி கட்டி கொண்டு , ஒரு பனியன் போட்டுகொண்டு (பொதுவாக கை இல்லாத பனியன் )கையில் பர்ஸ் எடுத்துக்கொண்டு ,(அவருடைய பர்ஸ் ,குண்டாக இருக்கும் ) ஒரு டர்கி டவல் வைத்துகொண்டு , சித்தியுடன் (பொதுவாக ) அல்லது தனியாகவாவது எங்காத்துக்கு வருவார் .அவர் தெருவில் நடந்து வருவதை பார்க்கும்போதே ,கம்பீரமாக இருக்கும்.கூட வரும் எங்களுக்கு ஒரு இனம் புரியாத ,பெருமையாக இருக்கும் .வீதியில் எல்லோரும் சாமி, சாமி என்று அவருக்கு மரியாதை 
தருவார்கள்.

அந்த காலங்களில் ,தேயிலைவிற்பனை ,முக்கியமாக மளிகை கடை ,டீ கடைகளில் தான் செய்யமுடியும்.கரடுமுரடானவர்களாக,நாட்டுபுறமாக இருப்பார்கள் .அவர்களை சமாளித்து  வியாபாரம் செய்வது கடினம்.ஆனால் சித்தப்பா அவர்களை ,மிகவும் லாவகமாக கையாளுவார் .அவர்கள் சித்தப்பாவை ,தங்களது இல்லத்தில் ஒருவராக கருதுவார்கள் . அன்றைய அரசியலில் டீகடை முதலாளிகள் முக்கிய பங்கு வகித்தனர் .ஏரியா ரவுடிகளாக இருந்தனர் . ஆனால் அவர்கள் தான் சித்தப்பா விடம் மிக 
மரியாதையாக இருப்பார்கள் .மதுரை முத்து போன்ற அந்த கால சிம்ம சொப்பனங்கள் ,சித்தப்பாவை சாமி என்று தான் அழைப்பார்கள் .சித்தப்பா அடிதடிக்கு அஞ்சாதவர் .நியாயம் என்று பட்டால் விடாமல் போராடுவார்.பயம் என்ற வார்த்தை அவரது அகராதியில் கிடையாது .அம்மா சொல்லுவா , பெரியகுளத்தில் 
வீட்டில் திருடன் வந்து அண்டா திருடி கொண்டு போன போது ,துரத்தி பிடித்த கதையை .
(எனக்கு கனவில் திருடன் வந்தாலே நாக்கு குழறும் )

ஞாயிற்று கிழமைகளில் ,அல்லது விடுமுறை நாட்களில் சித்தப்பாவின் ,முதல் வேலை 
(அதி காலையில் ) சைக்கிள் துடைப்பது .தினமுமே அதிகாலை நாலு அல்லது ஐந்து மணிக்கு எழுந்து விடுவார் .ஒரு லங்கோடு கட்டி கொண்டு ,சைக்கிளை கவனமாக துடைத்து ,ஆயில் போடுவார் . பின்னர் பிரேக் செக் செய்து , ப்ரீ வீல் செக் செய்து ,பெடலைலாவகமாக முன்னும் பின்னும் சுழற்றி ,செயின் கண்ணிகளை சரி பார்ப்பார்.அவருக்கு பொதுவாக எல்லாவிதமான தொழில் நுணுக்கங்களும் தெரியும் .
எல்லாம் துடைத்து முடிந்த பிறகு முன்னும் பின்னும் நடந்து அந்த சைக்கிளை காதல்  
பார்வை பார்ப்பார் . அவர் வைத்து இருந்தது ராலே சைக்கிள் என்று நினைக்கிறேன் .


சித்தப்பா shave செய்துகொள்வது பார்த்து ரசிக்க்கதக்கது .என்னுடைய அப்பா சவர கத்தியால்,shave செய்துகொள்ளுவார்.ஆனால் சித்தப்பா razor உபயோகிப்பார் .சித்தப்பா வீட்டின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று பெரிய மரத்தினால் ஆன சட்டம் போட்ட பெல்ஜியம் கண்ணாடி .அதன் முன் நின்று கொண்டு இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு நடுநடுவில் சித்தியுடன் பேசிக்கொண்டே முகத்தை மளமள என்று shave  செய்துகொள்வார் .


வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்து இருப்பார் .சாமான்களை எப்போதும் துடைத்து கொண்டே இருப்பார்.அனாவசியமான பொருட்களை வைத்துகொள்ளமாட்டார் .இருக்கும் வீட்டு சாமான்களை ஒழுங்கு படுத்தி அழகாக வைத்துஇருப்பார் .shoe வை தினமும் துடைத்து விட்டு தான் போட்டு கொள்வார் . எதையும் நேர்த்தியுடன் செய்வார் .


சித்தப்பா சாப்பிடும்போது ,ஒரு பருக்கை வீணாக்க மாட்டார் .அனாவசியமாக சாப்பாட்டில் குறை சொல்லமாட்டார்..சித்தியின் சமையல் மிகவும் ருசி ஆக இருக்கும் ..சித்தி சித்தப்பாவிற்கு பக்கத்தில் உட்கார்ந்து பொறுமையாக பரிமாறுவார் .எந்த காய்கறி
வகைகளையும் ஒதுக்க மாட்டார்.தனக்கு அவ்வளவாக பிடிக்காவிட்டாலும் , இலையில்
பரிமாறியதை சாப்பிட்டு விடுவார். 
சித்தப்பாவிற்கு சித்தி மேல் மிகவும் அன்பும் பிரியமும் உண்டு . அந்த காலத்தில் ,மனைவியுடன் நாலு பேர் முன் பேசகூட வெட்கப்படும் ஆண்கள் மத்தியில் சித்தப்பா ,சித்தியை my wife என்று அடிக்கடி கூறுவார் .ரொம்ப சந்தோஷமாக இருக்கும்போது சித்தியை பக்கத்தில் இறுக்கி கொள்ளுவார் .அப்போது சித்தியை பார்க்க அழகாக இருக்கும்.

சித்தப்பாவிடமும்,அவர்கள் வீட்டிலும் எப்போதும் தேயிலை நறுமணம் கமழ்ந்து கொண்டே இருக்கும்.சித்தப்பாவை பொதுவாக எல்லோருக்கும்,புருக் பாண்ட் கிருஷ்ணமுர்த்தி என்றே தெரியும் ..

அவருக்கு ஏராளமான நண்பர்கள் . அவர்களில் பால்ய காலத்து நண்பர்கள் ,தொழில் முறையில் நண்பர்கள் சமூகத்தில் மிகுந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் என்று ஏராளம் .அவரது நண்பர்களின் குடும்ப பிரச்சனைகளில் அவரை வேண்டி வந்து சமரசம் செய்ய கூப்பிடுவார்கள் .அவர் சொல்வதை அவர்கள் எல்லோரும் ஏற்றுகொள்வார்கள் .பொதுவாக அவர் நண்பர்களின் வீட்டிற்கு சென்றால் ,அவர்களது சமையல் அறை வரை 
சென்று அவர்கள் வீட்டு  பெண்கள் ,குழந்தைகள் ,பெரியவர்கள் என்று எல்லோரிடமும் இனிமையாக பழகுவார் .எந்த பெரிய அதிகாரியிடமும் அடிபணிய மாட்டார் . ஆனால் கௌரவமாக நடத்துவார் .எங்களுக்கு தெரிந்து அவருடைய மேலதிகரிகள் அவருக்கு மரியாதை தருவதை தான் நாங்கள் பார்த்திருக்கிறோம் . (இது பெரியகுளம் பரம்பரையில் எல்லோருக்கும் பொருந்தும் )சித்தப்பாவின் நண்பர்களில் எனக்கு டாக்டர் கிருஷ்ணமுர்த்தி ,ஸ்ரீனிவாசன் ,தோதாத்ரி ,தர்மராஜன்பெயர்கள் இன்னும் நினைவில் உள்ளது . சித்தப்பா நாடகங்களிலும் நடித்துள்ளார் .அந்தமேக்கப் இல் எடுத்த போடோக்களை நான் பார்த்து இருக்கிறேன் .பூரணம் விஸ்வநாதன் ,மேஜர் சுந்தரராஜன் முதலியோரும் அவருடைய நண்பர்கள் .சித்தப்பாவிற்கு இதர மதத்தை சார்ந்த நண்பர்களும் உண்டு .அதிலும் இஸ்லாம் சார்ந்த நண்பர்கள் ஏராளம் .அவருடைய இஸ்லாம் நண்பர்கள் உருவங்கள் நினைவில் இருக்கின்றன , ஆனால் பெயர்கள் மறந்து விட்டது .நான் உத்தமபாளையத்தில் படிதததால் , எனக்கு இது பற்றி தெரியும் .

கல்யாணங்களில் சித்தப்பாவின் பங்கு மகத்தானது .எல்லாவற்றையும் நன்றாக மேற்பார்வை இடுவார்.இப்பொழுது போல் அப்போது கேட்டரிங் ,காண்டராக்ட் ,கிடையாது .சமையல் ,ஸ்டோர் ரூம் ,பரிசாரகர் , எல்லாவற்றிக்கும் ,சரியான நபரிடம் பொறுப்புகளை கொடுப்பார் . எனக்கு இன்னும் ஞாபகம் உள்ளது . கல்யணம் என்றால் ஸ்டோர் ரூம் இன்சார்ஜ் , நானா மாமா தான் . அவர் ஒல்லியாக சட்டை போடாமல் ,வெற்றிலை ,பாக்கை,புகை இலையுடன்,குதப்பி கொண்டே ,வலது கை , ஆட்காட்டி விரல் முனையில் ,சுண்ணாம்பு வெள்ளையுடன் காணப்படுவார் .சித்தப்பாவிற்கு ஒரு வாலண்டீர் ,போல் பணி செய்வார் .சித்தப்பா கல்யாண வீட்டில் சுற்றி கொண்டே இருப்பார் . சம்பந்தமில்லாத 
நபர்களை கண்காணிப்பார் .அவர் இருந்தாலே நமக்கு அத்தகைய நேரங்களில் பெரிய நிம்மதி இருக்கும்
 .
சித்தப்பா சித்திக்கு சுகந்தா மேல் மிகவும் பிரியம் உண்டு .அவளது கணவர் கல்யாணமான சில மாதங்களிலேயே இறந்தது அவர்களை மிகவும் பாதித்தது .அந்த சமயத்தில் நாங்கள் அம்பாசமுத்ரத்தில் இருந்து மதுரைக்கு குடி பெயர்ந்தோம் .அப்பாவிற்கு வேறு ஊரில் போஸ்டிங் . அத்தகைய துயரத்தை எதிர்கொள்ள தெரியாத எங்களுக்கு ,சித்தப்பாவும், சித்தியும் தினமும் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களுடன் சில மணி நேரங்கள் இருந்து ,பின்னர் செல்வார்கள் .இது தினமும் தவறாமல் நடக்கும் .இப்போது அதை நினைத்து பார்த்தல் தான் , அவர்களது செயல் எவ்வளவு மகத்தானது என்று புரிகிறது .

சித்தப்பாவிற்கு குழந்தைகள் மேல் மிகவும் பிரியம் அதிகம் அழகாக நகம் வெட்டிவிடுவார்.அவ்வப்போது பற்களை பார்த்து சுத்தம் செய்து விடுவார்

.எனக்கு ஒரு முறை துண்டால் துடைத்து கொள்வது எப்படி என்று சொல்லி தந்தார் . முதலில் துண்டை நன்கு உதறி , இரண்டாக மடித்து ,உச்சந்தலையை நன்கு அழுத்தி தேய்த்து துடைக்க வேண்டும் .பின்னர் புடனி ,அதற்கு பின் நெஞ்சு .கை ,கால் இடுக்குகள் ,விரல்கள் .பின்னர் துண்டை கயிறு போல் திருத்தி முதுகைபுறத்தை துடைத்து கொள்ளவேண்டும். துடைத்த துண்டை தண்ணிரில் நன்கு அலசி பிழிய வேண்டும்.பின்னர் அதை பிரித்து உதறி இடுப்பில் கட்டி கொள்ள வேண்டும் .நாங்கள் வெளி உலகத்தில் கலந்து வாழ்வதற்கு தயாராக வேண்டும் என்பதில் சித்தப்பாவிற்கு அக்கறை அதிகம் . சட்டை பட்டன் களை,சரியாக போட்டு கொள்ளவேண்டும். தலை நீட்டாக வாரிகொள்ளவேண்டும் என்பார்.

 அப்பாவிற்கு  நாங்கள் சைக்கிள் ஓட்ட கற்றுகொள்வதில் பயம் ..ஒரு முறை சித்தப்பா சித்தி மேலூரில் இருந்த போது நாங்கள் சென்று இருந்தோம் .அப்போது எங்களை அழைத்து கொண்டு ஒரு வாடகை சைக்கிள் கடையில் அறிமுகபடுத்தி என் பசங்க எப்போது கேட்டாலும் சைக்கிள் தா என்று கூறி சென்றார் .எங்களிடம் சைக்கிளை 
நன்றாக ஓட்டி எனக்கு  காண்பிக்க வேண்டும் என்று கூறினார் .அந்த சந்தர்பத்தில் தான் 
நாங்கள் சைக்கிள் விட கற்று கொண்டேம் .

பொதுவாக அந்த காலத்தில் , நாங்கள் பள்ளிக்கூடம் செல்லும்போது ,டிபன் பாக்ஸ் தவிர,
காசு ஏதும் கொடுக்கமாட்டர்கள் .இன்டர்வெல் சமயத்தில் ,வீட்டிலிருந்து கொண்டு வந்த 
பக்ஷணம் எதாவது ட்ரவுசர் /சட்டை பையில் இருந்து சாப்பிடுவோம் (அந்த பக்ஷண/எண்ணெய் கரைக்கு அப்பாவிடம் திட்டு வாங்குவது வேறு கதை )மற்ற சிறுவர்கள் ,மாங்காய் ,மிளகாயிதூள் ,கொய்யா ,கடலை மிட்டாய் ,பட்டாணி ,குச்சி ஐஸ் ,பால் ஐஸ்என்று வாங்குவதை வேடிக்கை பார்ப்போம்.நான் யூனியன் கிறிஸ்டியன் பள்ளியில் 
படித்து கொண்டிருந்த போது ,இண்டர்வெலில் அப்படி நின்று கொண்டு இருந்த போது ,(நான் படித்து கொண்டு இருந்தது எட்டாம் கிளாஸ் ) சித்தப்பா என் தோளின் மேல் , கையை போட்டு என்னடா பராக்கு பார்த்துண்டு இருக்கே , என் கூட வா , என்று சைக்கிளை தள்ளிக்கொண்டே , மதுரை பஸ் ஸ்டாண்ட்க்கு உள்ளே எனனை கூட்டிக்கொண்டு  போனார் . (என்னுடைய பள்ளிக்கூடம் பஸ் ஸ்டாண்டிற்கு எதிரில் உள்ளது )அங்கே வரிசையாக வெற்றிலை பாக்கு ஜூஸ் கடைகள் இருக்கும் .டேய் ,பையனுக்கு லெமன் நன்னாரி போட்டு தா என்றார் .நான் ஆவலோடு குடிப்பதை ரசித்தார் .பின்னர் இவன் வந்த ஜூஸ் தா , என் பையன் தான் என்றார் .முதிகில் தட்டி கொடுத்து கிளாசுக்கு போ நேரமாச்சு என்று அனுப்பினார் .அந்த நினைவு எனக்கு இன்றும் பசுமையாக உள்ளது.
நாங்கள் அருணா மான்ஷன் ஸ்டோரில் எதிர்த்த எதிர்த்த வீட்டில் குடி இருந்தோம் .அப்போது அந்த ஸ்டோரின்,இன்னொரு பிரிவில் உள்ள கடைசி வீட்டில் ஒருவர் மன நோயாளி .அவர் சிலசமயம் மிகவும் முரட்டுத்தனமாக ,ஆவேசமாக ,கத்திக்கொண்டு இருப்பார் . அவர்கள் வீட்டில் அவரை சமாதான படுத்த முடியவில்லை என்றால்,சித்தப்பா வை கூப்பிடுவார்கள் . உடனேயே அவர் அமைதி ஆகி விடுவார் . சித்தப்பா ஒன்றும் செய்ய மாட்டார் , கண்களையும் ,குரலையும் ,உயர்த்தி ,கையைஆட்டி , ம்ம்ம் என்பார் .
அவ்வளவுதான் அவர் பேசாமல் அமைதியாக ஆகிவிடுவார்
.
ஒரு முறை அவருடைய நண்பரின் பையன் ஒருவன் தற்கொலைக்கு முயன்று ,உயிருக்காக போராடிக்கொண்டு இருந்த போது , ஹாஸ்பிடலில் , வேஷ்டி கேட்டார்கள் .
எல்லோரும் ஓடி ஒளிந்தபோது , சித்தப்பா தனது வேஷ்டியை உடனே அவிழ்த்து கொடுத்தார். அவன் ஆபத்து கட்டத்தை தாண்டியவுடன் , வீட்டிக்கு லங்கோடில் வந்தார் .உடுக்கை இழந்தவன் கை போல ,ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் .

சித்தப்பா சென்ற  தலைமுறையில் , முதலாவதாக ஒரு பன்னாட்டு கம்பனியில் வேலை 
செய்தவர் .முதன்முதலாக பேண்ட்,ஷர்ட் போட்டு கொண்டவர். முதன்முதலாக shoe போட்டுகொண்டவர்  .சொந்த சைக்கிள் வைத்துகொண்டவர் . தலையில் சப் இன்ஸ்பெக்டர் டைப் தொப்பி வைத்து கொண்டு இருப்பதை மிக சிறிய வயதில் பார்த்திருக்கிறேன் .முதன்முதலாக ரெயின்கோட் என்று ஒன்று இருப்பதை அவர் அணிந்ததை பார்த்தபின் தான் தெரிந்து கொண்டேன்.

 மனித உறவுகளை பற்றிய பெரிய பட்ட படிப்புகளை படித்தவர் அல்ல . ஆனால் தன்னுடைய வாழ்க்கையில் ,மனித உறவுகளை திறம்பட கையாண்டவர். அவரை புரிந்து கொள்ளாத உறவுகள் இருக்கலாம் ஆனால் நண்பர்கள் இல்லை .மனித நேயம் கொண்டவர்.என்னால் மறக்கமுடியாத என் சித்தப்பாவை நினைவு கூறுவது ,என் மனதிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது .

சித்தப்பாவின் பிறந்த நாள் 24,December.. அவரை நினைவு கூறுவோம் .
.

  • .